
இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் முதலமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை அனைவரையும் குற்றவாளி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எழிலரசி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எழிலரசி தனது தேர்தல் பிரச்சாரத்தை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு தொடங்கினார். இதில், அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதன் பின்னர் அவர் பிரசாரத்தில் பேசியபோது, புதுக்கோட்டையில் எந்த ஒரு அடிப்படை பிரச்சனைகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தீர்க்கப்படவில்லை என்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முறையாக செயல்படுத்தப்படாததால் கழிவுநீர் குடிநீருடன் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் கடைகளால் தான் என்றார். இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் முதலமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர் வரை அனைவரையும் குற்றவாளி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.




