
நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நீட் தேர்வு குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கான மறு தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாகக் கோவையிலும் சேலத்திலும் இரு மாணவிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நீட் என்பது தகுதித் தேர்வே தவிர, ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இறுதித் தீர்ப்பல்ல என்றும், அந்தத் தேர்வை மாணவ, மாணவிகள் அச்சத்துடன் அணுகாமல் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் வெளிப்படையான, நம்பகமான தேர்வு முறையை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


