
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று தனது 68ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட அவரது பயணம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நலிந்த மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனில் அவர் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தேச சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெறட்டும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் குடியரசுத் துணைத் தலைவர் இராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.



