Naam Tamilar Katchi – Raja Ammaiyappan: என்றைக்கும் நன்றிவுரைவோடு இருப்பேன்… வாழ்த்தி விடை பெறுகிறேன்!

Advertisements

நாம் தமிழர் கட்சியிலிருந்து அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜா அம்மையப்பன் விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களுடன் பயணித்த நான் இன்றுடன் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன். நாம் தமிழர் கட்சியில் இரண்டு தடவை சட்டமன்ற வேட்பாளர், ஒருமுறை சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆக என்னை நிறுத்தி எனக்காகவும் தமிழ் தேசியத்திற்காகவும் உழைத்த என் தம்பிகள், தங்கைகளை விட்டுக் கனத்த இதயத்துடன் பிரிகிறேன். உங்களுடன் நான் பயணித்த காலங்கள் எனது வாழ்வின் முக்கியமான காலமாகவும், இனிமையான வசந்த காலமாகவும் என்னி மகிழ்ச்சி கொள்கிறேன்.

நான் உங்களை விட்டுப் பிரிவது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம், வருத்தமடைய செய்யலாம் – ஆனால் கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதிபிரிவினைகளும், சமூக படுகொலையையும் கண்டு என்னால் இதில் பயணிக்க விருப்பவில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஓங்கிணைப்பாளர்கள் மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது. நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர் யார் பொருளாளர் என்பதை அறியாமலும், வெளிப்படுத்தாமலும் பயணிக்க விரும்பவில்லை.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல் கட்சியின் பொது செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார்? கட்சிக்கு என்ன செய்தார்? நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள்பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ? வேட்பாளர்கள் சிலரை தவிர பலபேரை எப்போதாவது கனத்தில் பார்த்துப் பார்த்து உள்ளீர்களா? கட்சிக்குள் சாதி இல்லாமல் செயல்பட முடியாதா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் சில நாட்களாகத் தவித்து வருகிறேன்.

பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளர் ஆகவும், துணை செயலாளர் ஆகவும் நியமித்து உள்ளதாகக் கூறப்படுவது உங்களுக்கு எல்லாம் தெரியுமா? கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளதா? அண்ணன் அருகில் உள்ள மூன்று பேரைத் தவிர்த்து நீங்கள் அண்ணனைச் சகஜமாகப் பார்க்கமுடிகிறதா? என்பதை தாங்கள் அறிந்து கொள்ளுங்கள். என்னதான் எனக்கு வருத்தம் இருந்தாலும் என்னைச் சீமான் அவர்கள் 8 ஆண்டுகளாக என்னைக் கண்ணியமாக நடத்தி எனக்குரிய மரியாதையை எனக்குக் கொடுத்துச் சிறப்பித்தமைக்கு என்றைக்கும் நன்றிவுரைவோடு இருப்பேன்.

தமிழ் தேசியம் ஒரு நாள் வெற்றி பெரும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன். வாழ்க தமிழ் தேசியம் வாழ்க நாம் தமிழர் கட்சி என்று வாழ்த்தி விடை பெறுகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *