
தெலங்கானா ராஷ்டிர சேனா என்கிற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள கவிதா, பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்குத் தமது கட்சி போராடும் என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தெலங்கானா ராஷ்டிர சேனா என்கிற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சந்திரசேகர ராவ் தனது கட்சியின்பெயரைத் தெலங்கானா ராஷ்டிர சமிதி என்பதில் இருந்து பாரதிய ராஷ்டிர சமிமி என மாற்றினார். அந்தக் கட்சியில் கவிதாவின் சகோதரர் ராமராவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
இதையடுத்துக் கவிதா தெலங்கானா ஜாக்ருதி என்னும் அமைப்பை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ராஷ்டிர சேனா என்கிற புதிய கட்சியைக் கவிதா தொடங்கியுள்ளார்.
தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, இருபதாண்டுகள் இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்ததால் தெலங்கானா தனி மாநிலம் பெற்றதாகவும், துரதிருஷ்டமாக அது தவறான திசையில் திரும்பிவிட்டதாகவும் கூறினார்.
தெலங்கானா மக்களின் விருப்பங்களும், இளைஞர்களின் விருப்பங்களும் பாரதிய ராஷ்டிர சமிதியின் பத்தாண்டு ஆட்சியிலும், காங்கிரசின் இரண்டாண்டு ஆட்சியிலும் நிறைவேறாமல் உள்ளதாகக் கூறினார்.
தெலங்கானா மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யத் தெலங்கானா ராஷ்டிர சேனா பாடுபடும் என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்குத் தமது கட்சி போராடும் என்றும் கவிதா தெரிவித்தார்.



