
பேருந்துக்காகக் காத்திருந்த மாணவன் கத்தியால் குத்தி கொலை!
கடலூர் அருகே 12ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் ஜூவா(17). விருதாச்சலத்தில் உள்ள அரசு ஆண்கள்மேல் நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போலப் பள்ளி செல்வதற்காகப் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அங்குத் தற்காலிக ஊழியராக மின்வாரியத்தில் பணியாற்றி வந்த ஆனந்த், ஜூவாவை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜூவா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜூவா உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாகக் கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் 12ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


