
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ஆலத்தூநாடு, ஊர்ப்புறத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலாவதி (40). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். அதில் ஒரு மகளுக்குத் திருமணமாகி விட்டது. கணவன், மனைவி இருவரும் கேரளாவுக்கு எஸ்டேட் வேலைக்கு அவ்வப்போது சென்று வந்தனர். அப்போது சக்திவேல் (32) என்பவருடன் கலாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த கணவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் ஒரு வழியாகச் சமாதானம் செய்து கணவர் மனைவி கலாவதியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போதும் சக்திவேலுடன் இருந்த கள்ளத்தொடர்பை கைவிடாமல் கலாவதி தொடர்ந்து போனில் பேசியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் இது தொடர்பாக, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் ரவிச்சந்திரன் மனைவியை அடித்து உதைத்தார். இதனிடையே கணவர் உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலை தொடர முடியாது என்பதால் கொலை செய்யத் திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் போதையில் இருந்த கணவர் ரவிசந்திரனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அக்கம் பக்கத்தில் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதால் கணவர் மூச்சு பேச்சு இல்லாமல் அசைவற்று கிடப்பதா அழுது கதறி நாடகமாடியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாவதி, அவரது கள்ளக்காதலன் சக்திவேல் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


