Lok Sabha Election 2024: மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு!

Advertisements

மக்களவைத் தேர்தல் 2024இல் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது.  இந்தத் தோ்தலில் அதைவிட அதிக எண்ணிக்கையில் மதிமுக தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இறுதியாக, ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவை சீட் குறித்து பின்னர் பேசிக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, திருச்சி, விருதுநகர் ஆகிய இரண்டில் ஒரு தொகுதியை மதிமுக கேட்டு வந்தது. இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே காங்கிரஸ் வசம் உள்ளது என்பதால், பேச்சுவார்த்தையில் மீண்டும் இழுபறி நிலவியது. இந்தச் சூழலில் மதிமுகவுக்கு திருச்சி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவர்மீது மிகுந்த அதிருப்தி நிலவுவதால் இந்த முறை அவருக்குக் கண்டிப்பாகச் சீட் கிடையாது எனவும், திருச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாது எனவும் தகவக்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தகவல்களுக்குத் திருநாவுக்கரசர் மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, திருச்சி தொகுதி மதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. திருச்சி தொகுதியைத் திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கே பெரும்பாலும் ஒதுக்கி வந்துள்ளது. இந்த முறை திருச்சியை திமுக குறி வைத்தது. திருச்சி அல்லது பெரம்பலூரில் கே.என்.நேருவின் மகன் களமிறங்கலாமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கே.என்.நேரு தனது மகனுக்காகப் பெரம்பலூர் தொகுதிக்கே காய் நகர்த்தி வந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், பெரம்பலூர் திமுகவுக்கும், திருச்சி மதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வந்துள்ளது. அதேபோல், 4 முறை கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 முறையும், திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் திருச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 59.70 சதவீதம் வாக்குகள் பெற்று 4.5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2004 தேர்தலில் வெற்றி பெற்ற மதிமுக 63.68 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *