
பஞ்சாபில் காதலிக்காகத் தேர்வெழுத பெண் வேடமணிந்து சென்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபில் உள்ள பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலையில் காலியாக உள்ள சுகாதார பணியாளர்இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 7ம் தேதி நடந்தது.
இதற்கான கோட்காபுராவில் உள்ள டி.ஏ.வி. தனியார் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டது. இந்த மையத்தில் காலையிலேயே ஏராளமானோர் தேர்வு எழுதக் குவிந்தனர்.
அவர்களில் ஒருவராகப் பசில்காவைச் சேர்ந்த அங்ரேஸ் சிங் என்ற இளைஞர் பெண்வேடமிட்டு தேர்வு எழுத வந்தார். தன் காதலிக்காகத் தேர்வு எழுத முயன்ற அவர் வளையல் லிப்ஸ்டிக் பொட்டு சகிதமாக வந்ததுடன் மட்டுமின்றி போலி ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையைக் காண்பித்து பல்கலை அதிகாரிகளை ஏமாற்றினார். இருப்பினும்தேர்வுக்காக ‘பயோ – மெட்ரிக்’ எனப்படும் கைரேகையை வைக்க முயன்றபோது அவர் வசமாகச் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து பல்கலை நிர்வாகம் அளித்த புகாரைதொடர்ந்து அங்ரேஸ் சிங்கை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பரம்ஜித் கவுர் என்ற தன் காதலிக்காக அங்ரேஸ் தேர்வு எழுத வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பெண்ணின் விண்ணப்பம் பல்கலை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் மோசடி கும்பலுக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


