
காங்கிரஸ் தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. கலந்து கொண்டு நிருபர்களிடம் பேசினார்.
அப்போது, மாநில காங்கிரஸ் தலைவர் என்பது நியமன பதவி. எப்போது கார்கே நினைக்கிறாரோ, அப்போது நியமனம் செய்வார். வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்போது பரிசோதனை முறையில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.
மேலும் ஒரே ஒரு தேர்தலிலாவது அனைத்து வாக்குச் வாவடிகளின் விவிபேட் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் எண்ணிக் காட்ட வேண்டியது அவசியம் அப்படி செயல்பட்டால் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் போய்விடும். இந்தி தேசிய மொழி அல்ல. இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க ஆவண செய்தல் வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான் இந்தியா கூட்டணி . பேரிடர் நடக்கும் இடங்களில் முதல்வர் நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்றைய தொழில் நுட்பத்தில் முதல்வர் எங்கிருந்து வேண்டுமானாலும் பேரிடர் மீட்புப் பணிகளைக் கண்காணிக்கலாம். முதல்வரை அதனால் விமர்சனம் செய்யாமல், நிர்மலா சீதாராமன் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இந்த முறை காங்கிரசுக்கு மனவருத்தம் கண்டிப்பாக இருக்காது. புதிய கட்சிகள் வந்தால் எங்களுக்குத் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. எது எப்படியாயினும் இந்தியா கூட்டணி மிகவும் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும். எனவே அனைவரும் கூட்டணியை பலப் படுத்த பாடுபடவேண்டும் என்று தெரிவித்தார்.


