
சாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்னும் பெயரில் மதத்தைப் பிளவுபடுத்தும் வேலையைக் கர்நாடகக் காங்கிரஸ் அரசு செய்து வருவதாக விஸ்வ ஒக்காலிக மகா சன்ஸ்தான மடத்தின் தலைவர் சுவாமி நிஸ்சலானந்தர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் மாநில அரசு, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி சமூக, கல்வி, பொருளாதார நிலையை அறிந்துகொள்ளும் வகையில் சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்துப் பெங்களூரில் ஒக்காலிக மடத்தின் தலைவர் சுவாமி நிஸ்சலானந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்றைய சூழலில் லிங்காயத்து கிறித்துவர், ஒக்காலிக கிறித்துவர், குருபா கிறித்துவர் என்று கணக்கெடுப்பில் ஏன் குறிப்பிட வேண்டும் என்று வினவினார்.
சாதியின் சமூக நிலையை அறிந்துகொள்வதற்கு இது தேவையில்லை என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.பின்தங்கிய சமூகத்துக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள், உரிமைகள், வசதிகளைப் பெறுவதற்குச் சாதி மட்டுமே போதும் என்று தெரிவித்தார்.



