
நீதி வெல்லும் எனப் பதிவிட்ட விஜய், முதலில் சிரிப்பது முக்கியமல்ல. இறுதியில் யார் சிரிப்பது என்பதுதான் முக்கியம் என்று அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள, பெரியார் உலகத்திற்கு, நிதி பங்களிப்பு தரும் நிகழ்ச்சி, அரியலூர் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, திராவிட கழக நிர்வாகிகள் மற்றும் குடும்பங்களிடமிருந்து, பெரியார் உலக கட்டமைப்பு நிதிப்பகிர்வாக, முதற்கட்ட தொகையாக ரூபாய் 10-இலட்சத்தை பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சி.பி.ஐ. விசாரணை என்றதும், தலைமறைவாக இருந்த தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் வெளியேவந்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பதியதற்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ. விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது எந்த வகையில் சரியானது என்பது, பல அரங்கங்களில், இப்போது கேள்வியாகியுள்ளது என்றும், இதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் சொல்கிறேன், பத்திரிகைகள் கூட இதை தவறான உத்தரவு என்று விமர்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர், தலைமறைவாக இருந்த தமிழக வெற்றிக்கழகத்தினர், இப்போது வெளியே வருவது மட்டுமல்லாமல், நீதி வெல்லும் என்று சொல்கிறார்கள் என்றும், முதலில் சிரிப்பது முக்கியமல்ல, இறுதியில் யார் சிரிக்கிறார்கள், யார் உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றும் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.



