
கன்னியாகுமரி மாவட்டம் முக்கிய ரயில் நிலையமான நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் ரயிலில் எடுத்துச் செல்வதை தடுக்க – ரயில்வே போலீசார் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, பயணிகள் ரயிலில் கொண்டு செல்வதை தடுப்பதற்காக, தெற்கு ரயில்வே துறை கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பண்டிகை காலங்களில், சிலர் பட்டாசுகள், பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை, பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். சிறிய பிழையால்கூட பெரும் விபத்திற்கு காரணமாக மாறக்கூடும் என்பதால், தீவிபத்து ஏற்படுத்தும் எந்த பொருட்களையும் ரயிலில் கொண்டு செல்வது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் முக்கிய ரயில் நிலையமான நாகர்கோவில் ரயில் சந்திப்பு நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், மற்றும் ரயில்வே காவல்துறையினர் இணைந்து, பயணிகளின் பைகளில் ஏதேனும் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு போன்ற பொருட்களை கொண்டு செல்கிறார்களா என சோதனை மேற்கொண்டனர்.
இருப்பினும் சிலர் வியாபார நோக்கத்தோடு, ரயிலில் பட்டாசுகள் நூதன முறையில் கொண்டு செல்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக, ரயில்வே காவல்துறையினர் இன்று நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.



