M.K.Stalin:கோவில் கருவறைக்குள் பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும்!

Advertisements

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாகப் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை:பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது;

“சேகர்பாபு அமைச்சரான பிறகு அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியைத் தி.மு.க. வழங்கி வருகிறது. முருகன் கோவில்களுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கி, பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன. பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

அறுபடை ஆன்மிக சுற்றுப்பயணத்துக்கு 813 பேர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். கட்டணமின்றி முடி காணிக்கை செலுத்தும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கைகளுக்குத் திராவிட மாடல் அரசு தடையாக இருக்காது.

திடீரென மாநாடு நடத்தவில்லை. பல திருப்பணிகளைச் செய்த பிறகே பழனி மாநாடு நடைபெறுகிறது. கோவில் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு துணையாக உள்ளது. கோவில்களில் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.

திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாகப் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கோவில் கருவறைக்குள் மனிதர்களுக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும். அறத்தால் உலகம் நன்றாகும்.”
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *