
சென்னை: சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது இந்தியா முழுவதும் பல்வேறு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான 20-20 போட்டியானது நடைபெற்றது. இதற்காகச் சுமார் 1500க்கும் மேற்பட்ட போலீசார் சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போட்டியின்போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களைத் தொடர்ச்சியாக ரோந்து பணியில் ஈடுபட்டு அவர்களைக் கண்காணித்தும் வந்தனர்.
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் திருவல்லிக்கேணி போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சென்னை – லக்னோ இடையேயான போட்டியின்போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேரைத் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக நடைபெறும் போட்டிகளின் போதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனத் திருவல்லிக்கேணி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


