
புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் கருவிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திற்கு பல கேள்விகளை எழுப்பினர். மேலும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரியை ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
லோக்சபாவுக்கு நடக்க உள்ள ஏழு கட்ட தேர்தல்களில் தற்போது முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப். 19-ல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் எனப்படும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி நாம் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை ஒப்புகை சீட்டுடன் உறுதி செய்யும் கருவியாகும்.
இந்நிலையில் ஓட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் விவிபேட்டில் பதிவாகும் ஓட்டுகளுடன் ஒப்புகை சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், விவிபேட் தொடர்பான வழக்கில் சில கேள்விகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம் அல்லது விவிபேட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் உள்ளதா?மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை மட்டுமே ப்ரோகிராம் செய்யப்படக்கூடியதா? எனக்கேள்வி எழுப்பினர். மேலும், தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரியைப் பிற்பகலில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.



