Arvind Kejriwal: ராமரின் பாதையில் சென்றால் நம்பர் 1 நாடாக இந்தியா மாறும்!

புதுடில்லி: ” ராமரின் பாதையில் நமது தேசம் சென்றால், இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது” என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜன.,22ம் தேதி நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்வானது, உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராமர் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை. ஆனால் இன்று நம் சமூகம் அந்த அடிப்படையில் பிளவுபட்டுள்ளது.

அனைவருக்கும் நல்ல கல்வி, ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி ‘ராமராஜ்ஜியம்’ உத்வேகத்துடன் டில்லி அரசு செயல்பட்டு வருகிறது. முதியோர்கள் 12 புனித யாத்திரை தலங்களுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுகின்றனர். இதுவரை 83,000 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அயோத்திக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். முடிந்தவரை அவர்களை அயோத்திக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போம்.

டில்லியில் இருந்து அயோத்திக்கு செல்லும் பக்தர்களின் பயணத்திற்கு நிதியுதவி வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தை உதவிகளையும் செய்வோம். மிகுந்த நேர்மையுடன், மக்களின் நலனுக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ராமரின் பாதையில் நமது தேசம் சென்றால், இந்தியா உலகின் நம்பர் 1 நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *