
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்நிலையில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்டார் வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா இருவரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது தங்களையும் தாத்தா ராமதாஸையும் ஜி.கே.மணி பிரித்துவிட்டதாகவும், பொங்கல் விழா எப்போதும் கூட்டுக் குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்தோம். ஆனால் தற்போது ஒரு வருடமாக பிரிந்து இருக்கிறோம்.
தனக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகியும், இதுவரை தாத்தாவுக்கு தெரியாது. எப்போதும் பிரசவ வலி பிடித்தால், மருத்துவமனைக்கு வந்து பார்ப்பார். என் குழந்தையை பார்க்கவில்லை. போன் கூட பண்ணவில்லை.நாங்கள் தருமபுரியில் எங்கள் அம்மாவுக்காக பிரச்சாரம் செய்ய தான் வந்தோம்.
ஆனால் பென்னாகரத்தில், நமக்கு துரோகம் செய்தவர்கள் போட்டியிடுகிறார்கள். தருமபுரி வெற்றியை விட, பென்னாகரம் வெற்றி தான் நமக்கு ரொம்ப முக்கியம் என்று கண்ணீர் விட்டு உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.



