
ஆப்கானிஸ்தானில் ஷியா சமூகத்தின் மீதான தனது கட்டுப்பாடுகளை தாலிபன் அரசு படிப்படியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காபூலில் உள்ள ஒரு மூத்த ஷியா அறிஞர், தற்காலிக திருமண ஒப்பந்தம் செய்ததற்காக தாலிபன் தங்களை அழைத்து விசாரித்ததாகவும், தங்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்..
ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேர் ஷியாக்கள் ஆவர். ஷியா குடிமக்களுக்கான சிவில் விவகாரங்களில் அதிகாரப்பூர்வமாக ஷியா ஃபிக்ஹை முந்தைய அரசு அங்கீகரித்திருந்தது..
ஷியா குடிமக்களின் பெரும்பான்மையான மக்கள் தொகை ஜாஃபரி ஃபிக்ஹைப் பின்பற்றுகிறது. 2009 இன் ஷியா தனிநபர் சட்டத்தின் கீழ் குடும்ப விவகாரங்கள் – அதாவது நிக்காஹ், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் இதர சிவில் விவகாரங்களில் முந்தைய அரசு இதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியிருந்தது..
ஆனால் ஆகஸ்ட் 2021 இல் ஆட்சிக்குத் திரும்பிய பிறகு, தாலிபன் ஆப்கானிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் முந்தைய இஸ்லாமிய குடியரசின் கீழ் இயற்றப்பட்ட சட்டங்களை நிறுத்தி வைத்தது.
அதற்குப் பதிலாக தாலிபன் தொடர்ந்து சுன்னி ஹனஃபி ஃபிக்ஹுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த அடிப்படையில் சுன்னி தாலிபன் அதிகாரிகள் தற்காலிக நிக்காஹ் நடைமுறையை அங்கீகரிப்பதில்லை, அதே சமயம் ஷியா ஜாஃபரி ஃபிக்ஹ் இதனை நியாயமானது எனக் கருதுகிறது.
தாலிபனின் 2024 இன் ஒழுக்கநெறிச் சட்டம், அவர்களின் அமைச்சகத்திற்கு “இஸ்லாமிய ஷரியத் மற்றும் ஹனஃபி ஃபிக்ஹ் நிபந்தனைகளின்படி நற்பண்புகளை ஏவவும், தீமைகளைத் தடுக்கவும்” அதிகாரம் அளித்தது.
இஸ்லாமிய பண்டிகைகளைத் தீர்மானிப்பதில் சிறிய வேறுபாடுகள் ஏற்பட்டபோது, தாலிபன் ஷியா குடிமக்களைத் தங்களின் ஃபிக்ஹ் படி கட்டாயமாக ஈத்-உல்-பித்ர் மற்றும் ஈத்-உல்-அதா கொண்டாட நிர்பந்தித்தது.
ஜனவரி 2026 இல், வெளிநாட்டில் உள்ள ஆப்கன் ஊடகங்கள், வடகிழக்கு மாகாணமான பதக்ஷானில் தாலிபன் அதிகாரிகள் சுன்னி இஸ்லாத்தை ஏற்கும் இஸ்மாயிலி குடிமக்களுக்குச் சலுகைகளை வழங்க முன்வந்ததாக செய்தி வெளியிட்டன. இந்த சலுகைகளில் நிதி உதவி, பாதுகாப்பிற்கான உத்தரவாதம் மற்றும் அரசு வேலைகளுக்கான வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.



