
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து, விவசாயிகளின் டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் விஜய் இன்று தண்ணீர் திறந்து வைத்தார் .
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனிடையே, கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 90 அடியைத் தாண்டியது.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதன்படி, முதலமைச்சர் விஜய் இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வந்தார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் சென்றார். பின்னர், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
முதலமைச்சர் விஜயின் வருகையையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



