
சென்னை தலைமைச் செயலகத்தை சுற்றிலும் இன்று கடுமையான துர்நாற்றத்துடன் புகைமூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்றுமதிக்காக சென்னை துறைமுக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ‘சல்ஃபர்’ (கந்தகம்) ரசாயனம், கடுமையான கோடை வெயில் காரணமாகப் புகைந்து வெளியேறியதே இதற்குக் காரணம் எனத் துறைமுக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
துறைமுகப் பகுதியில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும், வெயிலின் தாக்கத்தால் சல்ஃபர் ரசாயனத்தில் இருந்து புகை கசிந்ததாகவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சல்ஃபர் புகையினால் ராஜாஜி சாலை மற்றும் கோட்டைப் பகுதியில் இருந்த பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் மற்றும் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.




