
தி.மு.க., கூட்டணியில் கடைசியாக இடம்பிடித்த தே.மு.தி.க.,விற்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி, 10 சட்டசபை தொகுதிகளை திமுக தலைவர் ர் ஸ்டாலின் வழங்கினார். இதனல், தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு தொடங்கியது. திருமா, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கோபமடைந்தனர். அதோடு, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை பிரேமலதா பெரிதாக மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
கடலுார் பிரசார கூட்டத்தில், வி.சி.க., தலைவர் திருமாவளவன், விருத்தாசலம் வேட்பாளராக பிரேமலதாவை அறிமுகம் செய்தபோது, அவர் எழுந்து வணக்கம் தெரிவிக்காமல், புன்சிரிப்புடன் நாற்காலியில் அமர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமாவளவன் சொல்லும்போது நிற்காத பிரேமலதா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை சொல்லும்போது எழுந்து நின்றார்.
விடுதலை சிறுத்தைக் கட்சியினர் தங்கள் தலைவரை மதிக்கவில்லை. சாதீ ரீதியாக அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டினர். ஆனால், இந்த விஷயத்தை திருமா பெரிது படுத்தவில்லை. தொடர்ந்து, பிரேமலதா மீது எந்த வருத்தமும் இல்லை எனக்கூறி, திருமாவளவன், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிரச்னை அத்துடன் முற்று பெற்றது.
சமீபத்தில், சேலத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா பங்கேற்றார்.அதில் பேசிய அவர், ‘தமிழ்நாடு முழுக்க ஒரே ஒரு குற்றச்சாட்டு தான் எங்க அண்ணன் மேல இருக்கு. அதையும் இந்த பெண்கள் கூட்டத்துல சொல்கிறேன். எங்கு பார்த்தாலும், பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கு.
‘அதை தவிர வேற என்ன சொல்ல முடியும்? வேற ஒண்ணும் சொல்ல முடியாது இந்த ஆட்சி மேல’ என, குண்டை துாக்கி போட்டார். இதை கேட்டு, மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ‘சட்டம் – ஒழுங்கு குறித்து பொய்யான பிரசாரம் செய்து வருகின்றனர்’ என, முதல்வர் ஸ்டாலின், பிரசாரங்களில் பேசி வரும் நிலையில், அவர் முன்னிலை யிலேயே, இந்த குற்றச்சாட்டை பிரேமலதா முன் வைத்தது , தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேமலதாவின் பேச்சு, முதல்வர் ஸ்டாலினை கடும் கோபம் அடைய செய்துள்ளது. இதையடுத்து, பிரேமலதாவை சேலத்தில்சந்தித்து, இது தொடர்பாக முதல்வரின் மருமகன் சபரீசன் பேசிய போது, , ‘தான் பேச வந்தது வேறு; சொல்லியது வேறு’ என கூறி பிரேமலதா சமாளித்துள்ளார்.
இந்த விஷயத்தை வைத்து நெட்டிசன்கள் பிரேமலதாவை காமெடியாக சித்திரித்து சிரியாய் சிரித்தனர். மீம்களும் பறந்தன. இன்னும் சிலர் ஒருபடி போய், திமுக கூட்டணிக்குள் இருந்து கொண்டே பிரேமலதா உள்ளடி வேலைகளை பார்ப்பதாக கூறினர்.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். பிரேமலதா செயல்பாடுகளால் விசிக மற்றும் திமுகவினர் அதிருப்தியடைந்துள்ளனர். விருத்தாச்சலம் தொகுதியிலும் பிரேமலதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.
பிரேமலதா தன் கணவர் விஜயகாந்த் சென்டிமென்டில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் இருக்கும்போது தேமுதிக வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. ஆனால் , தற்போது அப்படியில்லை. திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் பிரேமலதாவுக்கு ஆதரவாக பெரியதாக வேலை பார்க்கவில்லை. இதனால்,ஏதோ சரியில்லை என்பதை பிரேமலதா உணர்ந்தார்.
தொடர்ந்து , உடனடியாக தனது ஆஸ்தான ஜோதிடரிடத்தில் ஆலோசனை கேட்க பிரேமலதா முடிவு செய்தார். பிரேமலதா, ஆன்மிகத்தில் அதீத நாட்டம் கொண்டவர். ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டே ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுப்பார். திமுக கூட்டணியில் சேர்ந்தால் நல்லது என்று ஆஸ்தான ஜோதிடர் கேரள ஜோதிடர் சொன்னதால், தற்போது திமுககூட்டணியில் தேமுதிக இருக்கிறது. அந்தளவுக்கு அந்த ஜோதிடரின் வார்த்தைகளுக்கு பிரேமலதா மதிப்பு கொடுப்பார்.
சமீபத்தில், விமர்சனங்களையடுத்து, உஷாரான பிரேமலதா மீண்டும் ஜோதிடர் ஆலோசனையை கேட்டார். சோழியை உருட்டி பிரஸ்ஸனம் பார்த்த கேரள ஜோதிடர், பிரேமலதா தங்க நகைகளுக்கு பதிலாக வைரம், பிளாட்டினம் நகைகள் அணிந்தால், இந்த பிரச்னை தீரும். நினைத்தது நடக்கும்.
உங்கள் ராசிக்கு இதுதான் நல்லது என்று கூறியுள்ளார். இதையடுத்து, வைர நகைகளுக்கு மாறியுள்ளார் பிரேமலதா. விருத்தாச்சலத்தில் கனிமொழியுடன் இணைந்து பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது, முற்றிலும் வைர, பிளாட்டினம் நகைகளுக்கு பிரேமலதா மாறியிருந்தார்.
இனியாவது டங்க் ஸ்லிப்பாக இருக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்பாம்.



