Nitin Gadkari:காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்யக் கூடாது!

பனாஜி:கோவாவின் பனாஜி அருகே உள்ள தாலிகோவாவில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், பா.ஜ.க. மாநில தலைவர் சதானந்த் தனவாடே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி பேசிய தாவது:-பா.ஜனதா கட்சி வித்தியாசமான கட்சியாக இருந்து வருகிறது. அதனால் தான் வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் பெற்றுள்ளது. காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பா.ஜனதா கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

நாமும் அதே தவறுகளைச் செய்தால், காங்கிரஸ் வெளியேறுவதிலும், நாம் ஆட்சிக்கு வருவதிலும் எந்தப் பயனும் இருக்காது. மற்ற கட்சிகளிலிருந்து நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வரும் நாட்களில் அரசியல் என்பது சமூகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான கருவி என்பதை கட்சி தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் ஊழலற்ற நாட்டை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

சாதி அடிப்படையிலான அரசியலை பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் சாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபட மாட்டேன் என்பதை மக்களுக்குத் தெளிவுப்படுத்தி உள்ளேன். சாதியைப் பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் 2027-ம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியை வலுப்படுத்துமாறு கோவா மாநில பா.ஜ.க. தொண்டர்களைக் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *