
தமிழக-கேரளா எல்லைப்பகுதியில் தமிழக போலீசாரின் வாகன சோதனையில் 315 கிராம் தங்க கட்டிசிக்கியது, இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் உள்ள புளியரை வாகன சோதனை சாவடியில் போலீசார் வழக்கமான வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தமிழகத்திலிருந்து கேரளா நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றை மறித்து அதிலிருந்த பயணிகளைச் சோதனை செய்தனர்.
அப்பொழுது, அந்தப் பேருந்தில் இருந்த கேரளா பயணி ஒருவரின் உடைமைகளைச் சோதனை செய்தபோது, அவரிடம் சுமார் 315 கிராம் மதிக்கத் தக்க தங்க கட்டிகள் இருந்தது.
அதனைத் தொடர்ந்து, அதுகுறித்த ஆவணங்களைப் போலீசார் கேட்டபோது, முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த நபர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனஸ் ரகுமான் (வயது 21) என்பதும், அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியிலிருந்து இந்தத் தங்க கட்டிகளை வாங்கி செல்வதும் தெரியவந்தது.
மேலும், இந்தத் தங்க கட்டிகளை மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கொண்டு செல்வதாக அனஸ் ரகுமான் கூறிய நிலையில், அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து தங்கத்தை பெற்று செல்லுமாறு போலீசார் அனஸ் ரகுமானுக்கு அறிவுரை வழங்கி, பிடிபட்ட தங்கத்தை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
குறிப்பாக, சமீப காலமாக தமிழக- கேரளா எல்லை பகுதியான புளியரை வழியாகப் பல்வேறு சட்ட விரோத செயல்கள் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில், முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்க கட்டி ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் புளியரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



