
நீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், சேலம் பேளூரைச் சேர்ந்த தமிழர் இராமலிங்கம் கார்த்திக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகத் தூய நீரைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீரில் எரியும் அடுப்பைத் தம்முடைய 20 ஆண்டுக்கால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக இராமலிங்கம் கார்த்தி கண்டுபிடித்துச் சாதனை புரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீரை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பைப் பயன்படுத்துவதன் மூலம், இனி வருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றை மாசுபடுத்தும் கொடுமைகள் பெரிதும் குறைந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நீரில் எரியும் அடுப்பு எனும் அரிய கண்டுபிடிப்பை மனிதகுலப் பயன்பாட்டிற்குத் தந்துள்ள HONC நிறுவனர் அன்பிற்குரிய சகோதரர் இராமலிங்கம் கார்த்தி, அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் நடிகர் சரத்குமார், கண்டுபிடிப்பில் பங்காற்றிய ஆய்வுக் குழுவினர் அனைவருக்கும் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



