
தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லக் குஜராத்தில் இருந்து சரக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டுள்ள 1,350 டன் யூரியாவை இறக்கி லாரியில் ஏற்ற விடாமல் திமுக வட்டச் செயலாளர் செந்தில் லோடுமேன்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாலை 6 மணிக்கு முன் லோடு ஏற்றினால், 100 ரூபாயும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், 300 ரூபாயும் கூலியாக வழங்க வேண்டும் என்பதால் லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்கத் திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், ரவுடிகளை வைத்து, லோடுமேன்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தென்மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை கூடல்நகர் குட்ஷெட்டில் தேங்கிக் கிடப்பதாகவும், லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதையும், மறுபுறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளைத் தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருப்பதையும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.


