
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயிலேயே இதுதான் மிக மோசமானது என்று அமெரிக்கா வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காட்டுத் தீ உருவாகி இரண்டு வாரத்திற்கும் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாகக் கலிபோர்னியா மாகாணத்தின் முக்கிய பகுதிகள் நாசமாகி இருக்கிறது.
இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தைத் தாக்குவதற்கு முன்பே நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பெரும்பாலான இடங்களை இந்தத் தீ நாசம் செய்து இருக்கிறது. இன்னும் இந்தத் தீக்கட்டுப்படுத்த முடியாமல் பரவிக் கொண்டு இருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மிக மோசமான தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிக்கொண்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்தக் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் தற்போது தற்காலிக மையங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகம் ஏற்படும் பகுதிகளில் கலிபோர்னியா மாகாணம் முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த ஒருவருடம் மட்டுமே கலிபோர்னியாவில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட காட்டுத் தீக்கள் ஏற்பட்டது. ஒரே மாதத்தில் கலிபோர்னியாவில் இங்கே 2-3 முறை தீ ஏற்படுவது வழக்கம்.
வழக்கமாக இந்தக் காட்டுத் தீ முதலில் வென்சுரா என்ற பகுதியில் உருவாகும். பின் சாண்டா பார்ப்பாரா பகுதியில் உக்கிரம் அடைந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை கூடப் பரவும்.
இந்த முறை லாஸ் ஏஞ்சல்ஸ் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. 3,00,000 பேர் கலிபோர்னியா விட்டு வெளியேறிவிட்டனர். 10,000க்கும் அதிகமான வீடுகள் அப்படியே தீக்கு இரையாகி இருக்கிறது. அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட பெரிய காட்டுத் தீயில் இதுவும் ஒன்று.
இந்த முறை காட்டுத் தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்தத் தீக்கைப்பற்றிவிட்டது. 2,95,000 ஏக்கர் நிலப்பரப்பை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் ஆக்கிரமித்து இருக்கிறது.
இந்தத் தீ மொத்தமாக ஆக்கிரமித்த பகுதிகள் லண்டனின் அளவைவிட அதிகமாகி விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை இந்தத் தீக்காரணமாக 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் ஏற்பட்ட புகை நியூயார்க் நகரத்தில் கூடப் பரவி உள்ளது. 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் செலவு ஆகி உள்ளது. எவ்வளவு இழப்பு என்று தீ அணைந்த பின்பே கண்டுபிடிக்க முடியும். 4700 கோடிக்கும் அதிகமாகக் கண்டிப்பாக இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கே தீயை அணைக்க போதுமான ஊழியர்கள் இல்லை என்பதால் ஓய்வு பெற்ற 600 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
அங்கே தீயை அணைப்பதில் அதிபர் பிடன் அரசுத் தோல்வி அடைந்துவிட்டதாக அதிபராகத் தேர்வாகி உள்ள டிரம்ப் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.



