
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே குறுவை நெல் பயிரிடுவதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை எனக் கூறிப் பொதுமக்களும் விவசாயிகளும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தலைஞாயிறு அருகே கோடியவிநாயகநல்லூர், பண்ணைத்தெரு, ஆய்மூர், மாராச்சேரி, நீர்முளை ஆகிய ஊர்களில், ஐயாயிரம் எக்டேருக்கு மேல் குறுவை நெல் பயிரிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடைமடைப் பகுதிகளுக்குப் பாசனத்திற்குத் தண்ணீர் வந்து சேரவில்லை என்று கூறி அருந்தவம்புலத்தில் பொதுமக்கள், விவசாய சங்கத்தினர் ஒன்றுதிரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் மதியழகன், திருக்குவளை வட்டாட்சியர் கிரிஜாதேவி, காவல்துறை ஆய்வாளர் நாகலெட்சுமி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினர்.
பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


