3 பிணைக்கைதிகள் பத்திரமாக இஸ்ரேல் திரும்பினர்!

Advertisements

டெல் அவிவ்:

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும்.

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

பின்னர் தற்காலிகமாகப் போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர்.

போர் நிறுத்தம் நேற்று மதியம் 12 மணிக்கு அமலுக்கு வரவிருந்தது. ஒப்பந்தப்படி இருதரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்கள் பெயர் விவரங்களை 24 மணி நேரத்திற்கு முன் தெரிவிக்க வேண்டும். இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது.

ஆனால் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் விவரங்களை வெளியிடவில்லை. சுமார் 2 மணி நேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது.

அதன்படி, ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்தது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் விடுதலை செய்யப்பட்ட 3 பிணைக்கைதிகளும் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *