
மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் உழவர்களின் பயிர்க்கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்யக் கோரி ஏராளமானோர் இரண்டாவது நாளாகத் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் பருவந் தவறிப் பெய்த மழை, வறட்சி, விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் உழவர்கள் கடன்சுமைக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தங்கள் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் நாக்பூரில் முன்னாள் அமைச்சரும் பிரகார் கட்சித் தலைவருமான பச்சுக் காடு தலைமையில் ஆயிரக்கணக்கான உழவர்கள் கன்னியாகுமரி – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
டிராக்டர்கள், கார்களில் வந்த உழவர்கள் சாலை முழுவதும் நிறைந்திருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பல கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போராட்டக் களத்தில் செய்தியாளரிடம் பேசிய பச்சுக் காடு, உழவர்கள் கடனில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
மாநில அரசிடம் போதிய நிதி இல்லாவிட்டால் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இன்று நண்பகலுக்குள் தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் ரயில் மறியலில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரித்தார்.


