
வயநாடு :உலகின் மிகப்பெரிய மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டம் தேர்தல் பத்திரம் என்றும் இந்த ஊழலுக்கு மூளையாகச் செயல்பட்டது பிரதமர் மோடி தான் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தேர்தல் பத்திர திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்படும் பின் விளைவுகளுக்குப் பின்னர் அனைவரும் வருந்துவார்கள் என்றும் கூறியிருந்தார்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் அதே ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தேர்தல் பத்திரத்தில் மிக முக்கியமானது பெயர் மற்றும் நன்கொடை வழங்கப்பட்ட தேதி ஆகும். இந்தப் பெயர் மற்றும் தேதிகளைக் கவனமாகப் பார்த்தால் எப்போது நன்கொடையாளர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரம் தெரிய வரும்.
அதன்படி எப்போது அந்த ஒப்பந்தம் வாங்கப்பட்டது அல்லது சிபிஐ விசாரணை குறிப்பிட்ட நிறுவனம்மீது எப்போது கைவிடப்பட்டது என்பது தெளிவாகிவிடும். இந்த இடத்திலேயே மோடி மாட்டிக்கொண்டார்.
இதனால் தான் இந்தப் பேட்டியை அவர் வழங்கியிருக்கிறார். உலகின் மிகப்பெரிய மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டம் தேர்தல் பத்திர திட்டம்.இதன் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவரே பிரதமர் மோடி தான்.
தேர்தல் பத்திரம்மூலம் பாஜக பணம் பெற்றதுமே அந்தப் பத்திரம் வழங்கிய நன்கொடையாளர்களுக்கு பெரிய அளவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. ஒரு நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் தேர்தல் பத்தின மூலம் நன்கொடை பெற்ற மறுநாளே அந்த நிறுவனத்தின் மீதான விசாரணை கைவிடப்படுவது எப்படி என்பது குறித்து பிரதமர் மோடி இடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
நன்கொடையாளர்கள் பணம் வழங்கியதும் அவர்களுக்குப் பெரிய ஒப்பந்தங்கள் உள்கட்டமைப்பு சார்ந்த ஒப்பந்தங்கள் உடனடியாக வழங்கப்படுகின்றன. இதுதான் மிரட்டிப் பணம் பறிக்கும் திட்டத்தின் உண்மை கதை” என்று தெரிவித்தார்.
முன்னதாகப் பிரதமர் மோடி தேர்தல் பத்திரத் திட்டத்தின் நோக்கமே கருப்பு பணம் புழக்கத்தை முடக்குவது தான் என்றும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்கின்றன என்றும் கூறியிருந்தார்.
மேலும் பலனாய்வு அமைப்புகளின் விசாரணை வலையத்தில் சிக்கிய 16 நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 37 சதவீதம் மட்டுமே பாஜகவுக்கு வழங்கப்பட்டு இருந்ததாகவும் மீதமுள்ள 67 சதவீதம் எதிர்க்கட்சிகள் பெற்றதாகவும் மோடி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


