
கடந்த மே 10-ம் தேதி தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தீவிர நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தினமும் தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் அவர், துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது பணிகளைச் சீரமைக்க இருவரைச் சிறப்பு ஆலோசகர்களாக நியமித்துள்ளார்.
முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜான் ஆரோக்கியசாமி ஒரு அரசியல் வியூக நிபுணர். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்தவர்களில் இவரும் ஒருவர். இவர் முதலமைச்சருக்கு அரசியல் ரீதியான விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்குவார்.
விஷ்ணு ரெட்டி பிற நிர்வாக மற்றும் இதர முக்கிய விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவர் முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்குப் பிறகு, அந்த நியமனம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. அந்தச் சூழலுக்குப் பிறகு, இப்போது நிர்வாகத் திறன் மற்றும் அரசியல் வியூகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரை முதலமைச்சர் விஜய் நியமித்திருப்பது, அரசு நிர்வாகத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.




