
டீசலில் 15 விழுக்காடு ஐசோபியூட்டனால் கலந்து விற்க அரசு திட்டமிட்டுள்ளதாகச் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பெட்ரோலிய இறக்குமதியையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கும் நடவடிக்கையாகப் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. இந்நிலையில் டீசலில் நேரடியாக எத்தனாலைக் கலந்து பயன்படுத்த முடியாது என்பதால், எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனால் தயாரிக்கவும், அதை டீசலுடன் 15 விழுக்காடு கலந்து விற்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெட்ரோலில் 15 விழுக்காடு ஐசோபியூட்டனால் கலந்து விற்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
இதன்மூலம் பெட்ரோலிய இறக்குமதிக்குச் செலவாகும் அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு ஜெனரேட்டர்கள் நூறு விழுக்காடு எத்தனால் மற்றும் ஐசோபியூட்டனால் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு வெற்றிகரமாக இயக்கப்படுவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.



