
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு ஆறுநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தில்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக அவர் இன்று காலை தில்லியில் இருந்து தனி விமானத்தில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இது குறித்துச் சமூக வலைத்தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளில் இன்று முதல் ஜூலை 11ஆம் நாள் வரை சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய அதிபர் பிரபவ சுபியாந்தோ அழைப்பின் பேரில் அந்நாட்டில் இன்று முதல் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இருநாடுகளிடையான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அப்போது விரிவாகப் பேச உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணிஅல்பனீசின் அழைப்பை ஏற்று மெல்போர்னுக்குச் செல்லவிருப்பதாகவும், அங்குப் பாதுகாப்பு, வணிகம், முதலீடு, கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பை ஏற்று ஆக்லாந்துக்குச் செல்லவிருப்பதாகவும், அந்நாட்டுடன் பொருளாதார, வணிக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்துப் பேச்சு நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.


