
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான போரூர், ராமபுரம், ஆலப்பாக்கம், மதுரவாயில், நெற்குன்றம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் நேற்றுத் திடீரென மழை பெய்தது.
காலையில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் இடியுடன் கூடிய மழை பொழிந்தது. இந்த, மழையின் காரணமாகச் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது.
இன்று மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் ஆறாம் நாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் மூன்று செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.




