
பெங்களூருவில் பெய்த கனமழையினால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்
பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் பெய்த கனமழையினால், தனியார் மருத்துவமனை ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், மழையிலிருந்து தப்பிக்க அங்கு ஒதுங்கியிருந்த நடைபாதை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து மிகவும் துயரமானது என்றும் துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சமும் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.




