
அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்படுவதாக லல்லு சிங் எம்.பி. தெரிவித்து உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்ட செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், வருகிற ஜனவரி மாதம் 22-ஆம் தேதி’ கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் 2024 ஜனவரி மாதம் குழந்தை ராமர் சிலை நிறுவப்படும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்திருந்தது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடக்கின்றன. கடந்த 2020 ஆகஸ்ட் 5-ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோவில் கட்டுவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர் அறக்கட்டளையின் கோயில் வளாகத்தில் ராமாயண காலத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய இந்து சமய ஜீயர்களின் சிலைகளை வைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுவதற்கு மட்டும் ரூ.1,800 கோடி செலவாகும் என அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது.
2023 டிசம்பரில் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். 2024 ஜனவரியில் மகர சங்கராந்தி பண்டிகையின் போது ராமர் கருவறையில் அமர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது கோவில் பணிகள் முடிந்து குடமுழுக்கு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அயோத்தி ரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்த ரயில் நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில், அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் “அயோத்தி தாம்” என மாற்றப்படுவதாக லல்லு சிங் எம்.பி. தெரிவித்து உள்ளார். “பொது மக்களின் எதிர்பார்ப்புகளின்படி அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்படுகிறது,” என்று லல்லு சிங், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய ரயில் நிலையத்தை நாளை மறுநாள் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நேரடியாக ராமர் கோவிலுக்கு சென்று முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட உள்ளார். ‛‛அயோத்தி தாம்” என்பது ராமர்-சீதையின் இருப்பிடத்தைக் குறிக்கும் சொல் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

