
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யாவும் உக்ரைனும் தொடர்ந்து ஒன்றையொன்று தாக்கி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றால் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தக் கொடிய தாக்குதலில் பொதுமக்களின் குடியிருப்புக் கட்டடங்களும், பண்டகக் காப்பகங்களும் தகர்த்து நொறுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்கு, அதை இடைமறித்துத் தாக்குவதற்குப் பேட்ரியாட் ஏவுகணைகளைத் தந்து உதவுமாறு அமெரிக்காவுக்கும், அதன் கூட்டணி நாடுகளுக்கும் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கீவ் நகரில் ஆயுதங்கள், இராணுவத்தினருக்கான பொருட்களைச் சேர்த்து வைத்து வழங்கும் கிடங்குகள், டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



