
மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவுத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது என்றும் மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் பல உள்ள நிலையில் மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளைச் செய்யத் துடிப்பது சரியல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, மதுப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மது முன்பதிவு திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.





