
காதலை முறித்துக் கொண்ட மாணவியைக் காதலன் தீ வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா, கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்துள்ளது.
இதற்கிடையில், விக்னேஷிற்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் பள்ளி மாணவி தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த மாணவிக்குக் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், ஒருநாள் மாணவியைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் விக்னேஷ் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து விக்னேஷ் சொன்ன இடத்திற்கு மாணவி சென்ற நிலையில் அங்கு வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். பின், மாணவி இந்த உண்மைகளை வெளியே சொல்லி விடுவாரெனப் பயந்த விக்னேஷ், மாணவியைத் தாக்கி அவரது துணியில் சிகரெட் லைட்டரால் தீ வைத்துள்ளார்.
மாணவி அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதற்கிடையில், விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான விக்னேஷை தேடி வருகின்றனர்.


