
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அரசு பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும் இதுபோன்ற விபத்து சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி சண்முகராஜ் (36) என்பவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் வெடி மருந்து கலக்கும்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெம்பகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

