
48 மணி நேரத்துக்குள் ஹார்மஸ் நீரிணையில் உள்ள கடல்வழியை எந்த அச்சுறுத்தலும் இன்றித் திறந்து விடாவிட்டால், ஈரானில் உள்ள மின்நிலையங்களைத் தாக்கி அழிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ஆதரவு நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரின் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு ஏற்றிக்கொண்டு ஹார்மஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இதனால் எண்ணெய், இயற்கை எரிவாயு ஏற்றுமதி தடைபட்டு அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுரூத் சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ஹார்மஸ் நீரிணையில் உள்ள கடல்வழியை 48 மணி நேரத்துக்குள் எந்த அச்சுறுத்தலும் இன்றி முழுவதும் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இல்லாவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்களை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டியுள்ளார்.




