
மாவோயிஸ்ட்கள் அட்டூழியம்!
கேரளா: கர்நாடகா மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் வயநாடு மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. எல்லையோர பகுதிகளில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு அவ்வப்போது வந்து செல்லக்கூடிய அவர்கள் அரசுக்கு எதிராகப் போஸ்டர்கள் ஒட்டிச் செல்வார்கள்.
வயநாடு ஒட்டி நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளதால், இங்கு மாவோயிஸ்ட்கள் நுழைந்துவிடாதபடி கிராம பகுதிகள், வனப்பகுதிகளில் தமிழ்நாடு அதிரடிபடையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாத இறுதியில் எல்லை பகுதியில் நுழைந்த மாவோயிஸ்ட்கள் சிலர் அங்குள்ள அரசு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் பொருட்களைச் சூறையாடினர். அலுவலக சுவற்றில் கம்பமலை தோட்டம் பழங்குடிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சொ ந்தமானது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் கூடிய போஸ்டரைத் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஓட்டிச்சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கேரள மாநிலம் வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 5 மாவோயிஸ்ட்கள் அங்குக் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான தகவலின் பேரில் கேரள போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



