
இஸ்ரேல் இராணுவத்தின் ஈவிரக்கமற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை உள்ளதாக உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனம் தனி நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலாலும் முற்றுகையாலும் சீர்குலைந்துள்ள காசாவில் ஆயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமல் பட்டினியால் இறக்கும் நிலை உள்ளதாக ஹமாஸ் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன இணைந்து வான்வழியாக 25 டன் உணவுப் பொருட்களைக் காசாவில் போட்டுள்ளன.ஒருபுறம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டாலும் மற்றொருபுறம் பட்டினிச்சாவுகள் நேர்வதாகவும், கடந்த சில நாட்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள 20 இலட்சம் மக்களில் மூன்றில் ஒருபங்கினர் பல நாட்கள் உணவின்றித் தவிப்பதாகவும் இதனால் பட்டினிச்சாவுகள் நேரும் அபாயம் உள்ளதாகவும் ஐ.நா. உணவுத் திட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

