
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அவரது நினைவுத் தினத்தை ஆண்டுதோறும் குருப் பூஜை தினமாகக் கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். இதன்படி முதலாம் ஆண்டுக் குருப் பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.
விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்திலிருந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு பேரணியாகச் செல்லத் தே.மு.தி.க.வினர் திட்டமிட்டிருந்தனர். பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறிப் பேரணி நடைபெற்றது.
கேப்டன் வாழ்க… அரசு ஒழிக… என்ற முழக்கத்துடன் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாகச் சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விளக்கேற்றிப் பிரேமலதா மரியாதை செலுத்தினார்.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு, ஓ.பன்னீர்செல்வம், சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.


