
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா கர்ப்பிணிப் பெண்ணாக இருந்தபோதிலும், களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாகப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அவருக்குப் பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கடுமையாகத் தாக்குதல் தொடுத்திருப்பதைக் கண்டித்துள்ளார்.
கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிய திமுக இப்போது ஆட்சி முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.


