
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் தோல்வியில் முடிந்து விட்டது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனே சாத்துரில் தோல்வியை சந்தித்துள்ளார். அண்ணாமலை தொடர்ந்து , பாஜக தலைவராக இருந்திருந்தால், அவரின் அனல் பறக்கும் அரசியல் நடவடிக்கையால் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு நல்ல ஆதரவு கிடைத்திருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக தன் வசமிருந்த இருந்த 4 சீட்களையும் இழந்து, புதிதாக நீலகிரி தொகுதியை மட்டும் கைப்பற்றியுள்ளது. மத்திய அமைச்சர் முருகனும் படுதோல்வியை சந்தித்தார். இந்த தேர்தலில் பா.ஜ., 14 லட்சத்து 67 ஆயிரத்து 24 ஓட்டுகளுடன் 2.97 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு 11.24 சதவீத ஓட்டுக்களைப் பெற்றிருந்தது. எனவே இம்முறை வென்று கூட்டணி அமைச்சரவையில் பங்கேற்கலாம் என்ற கனவில் மிதந்தவர்கள், விஜய் அலையில் காணாமல் போய்விட்டனர்.
மூன்று சதவீத அளவில் இருந்த ஓட்டு சதவீதம், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வருகைக்குப் பின் 11.5 சதவீதமாக உயர்ந்தது. தி.மு.க.,வுக்கு குடைச்சல் தரும் அவரது பேட்டிகள், மக்கள் யாத்திரை, போராட்டங்களால், கிராம அளவிலும் இளைஞர்கள் பலர் கட்சிக்குள் வந்தனர். அ.தி.மு.க., கூட்டணிக்காக அவரை கழற்றி விட்டதால், அதன் பலனை தற்போது அனுபவிப்பதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கூற தொடங்கியுள்ளனர்.
அண்ணாமலைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்து கொள்ள முடியாத சிலர் கொடுத்த தவறான தகவல்களால் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இவை அனைத்துமே அண்ணாமலைக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி என்பதையும், அதனால், தமிழக பாஜக மிக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதையும் டெல்லி பாஜக தலைமை தற்போது உணர்ந்துள்ளது.
இதனால், மீண்டும் அண்ணாமலை கையில் தமிழக பாஜகவை ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது. அடுத்து அண்ணாமலையின் அரசியல் , முதல்வர் விஜய்க்கு எதிராக மிக தீவிரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சட்டசபையில் பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாமல் திணறும் முதல்வர் விஜய் அண்ணாமலை கேட்கும் கேள்விக்கு எப்படி பதில் சொல்வர்? என்கிற கேள்வி எழுந்துள்ளது,
மேலும் , அண்ணாமலை விஜய்க்கு எதிராக அரசியல் ஆட்டத்தை தொடங்கும் நேரத்தில் விஜய் மற்ற அரசியல் தலைவர் போன்று கண்டும் காணாமல் செல்ல முடியாது. கடந்த திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைகழக விவகாரம், DMK FILES போன்ற பல சம்பவங்கள் உதாரணமாக சொல்லலாம். இதனால், அமெரிக்காவில் இருக்கும் அண்ணாமலையின் தமிழக வருகையை எதிர்பார்த்து பாஜகவினர் மட்டுமில்லை, ஒட்டு மொத்த தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் முதல்வராக பதவி ஏற்ற அடுத்த ஓரிரு நாட்களில் விஜய்யின் முகத்திரை ஒவ்வான்றாக கிழிய தொடங்கி இருப்பதுதான். ஊழலை ஒழிப்பேன் என கூறி ஆட்சிக்கு வந்து விட்டு பல்வேறு ஊழல் முறைகேட்டில் சிக்கிய லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் கட்டுப்பாட்டில் முதல்வர் விஜய் இயங்குவது மக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. அதோடு, கடந்த 12ம் தேதி தமிழக முதல்வரின் அரசியல் பிரிவுக்கான சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு த.வெ.க-வை ஆதரித்த பல கட்சிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. த.வெ.க-வுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி, ‘அரசு அதிகாரியாக ஜோதிடரை நியமிப்பது அறிவியல்பூர்வ நிகழ்வு அல்ல. இதனால் ஜோதிடம் குறித்த மக்களின் நம்பிக்கையே அதிகரிக்கும்’ என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தது. மறுநாள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுக்குப் பிறகு, தி.மு.க., வி.சி.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலரும் ஜோதிடரை அரசுப் பதவியில் நியமித்ததற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உச்சக்கட்டமாக தேமுதிக தலைவர் பிரேமலதா, உங்கள் சொந்த செலவில் ஜோதிடரை பணியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வரை காட்டமாக விமர்சித்தார். பின்னர், ஜோதிடரின் நியமனத்தை வாபஸ் பெற்றாலும், விஜயின் இது போன்ற ‘கத்துக்குட்டி’ செயல்பாடுகள் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. சினிமா மோகத்தில் ஏமாந்து விட்டோமே என விஜய்க்கு வாக்களித்த மக்கள் வருத்தப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தவறினால் இனி அந்த ஆண்டவனாலே கூட தமிழக பாஜகவை காப்பாற்ற முடியாது என்பதை டெல்லி பாஜக தலைமை உணர்ந்துள்ளது. இதனால், அண்ணாமலையின் தேவையையும் புரிந்து கொண்டுள்ளது. அண்ணாமலை இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த போது தனி மெஜாரிட்டியில் ஆட்சியில் இருந்த திமுகவை கதி கலங்க வைத்ததை நாடறியும். அப்படி இருக்கையில் தவெக தலைவர் விஜய் எம்மாத்திரம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தற்போது, அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை கருத்தரங்கில் பங்கேற்க அண்ணாமலை சென்றுள்ளார். கருத்தரங்கு முடிந்தபின் குடும்பத்துடன் அங்கு கோடை விடுமுறையை கழித்துவருகிறார். விரைவில் அவர் தமிழகம் திரும்பலாம். அதன்பின் அவரை சந்தித்து ஆலோசனை நடத்த அண்ணாமலையின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


