
தமிழக முதல்வர் என்ற முறையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பிரதமரை சந்திப்பது ஒரு சம்பிரதாயமானது. எனினும் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திக்கும் நிகழ்வுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் நான்கு கோரிக்கைகள், பத்து நிமிடங்கள் என ஒரு மாநில முதலமைச்சரும் நாட்டின் பிரதமரும் மிக குறுகிய நேரமே சந்திக்கிறார் கள் என்றால் அது கவலைப்பட வேண்டிய விஷயம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் கூட்டணி கட்சி தலைவர் ஆன ராகுல் காந்தியையும் விஜய் சந்திப்பதாக இருந்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் பதவி யாருக்கு என சித்ராமையாவுக்கும் டி கே சிவக்குமாருக்கும் நடந்த சண்டையில், சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார். இதனால் சித்ராமயா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றிருந்த நிலையில் ராகுலை சுற்றி கர்நாடக புள்ளிகள் அந்த மாநில விவகாரம் என பிசியாக இருந்தார். அதனால் இன்னும் சில தினங்களில் மீண்டும் டெல்லி வரும் போது ராகுலை சந்திக்கலாம் என விஜய் முடிவு செய்துவிட்டார். விஜயும் ராகுலிடம் சந்திக்க நேரம் கேட்கவில்லை. ராகுலும் கொடுக்கவில்லை” என தெரிகிறது.
தமிழக வெற்றி கழக தலைவராக விஜய் இருந்தபோது மாவட்டத் தலைவர்கள் யார், என்ற விவரங்கள் அவருக்கு தெரிந்திருக்காது. அனைத்தையுமே புசி ஆனந்த் தான் பார்த்துக் கொள்வார். விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் என்பது மட்டுமே விஜய்க்கு தெரியுமே தவிர இந்த மாவட்டத்திற்கு யார் என்பதெல்லாம் அவர் அப்போது நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது விஜய் முதலமைச்சராகிவிட்டார். அவரது அமைச்சரவையில் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆதவ அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர முதலமைச்சருக்கு வேறு யாருடைய முகமும் பரிச்சயம் இல்லை என்கிறார்கள்.
இதனால் , முதலமைச்சரின் அறைக்குள் அமைச்சர்கள் செல்லும்போது அதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே இவர் பெயர், இந்தத் துறை அமைச்சர் என்ற விவரங்கள் முதலமைச்சர் விஜய்க்கு துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கப்படுகிறது. அதை பார்த்து விட்டு தான் தன் அறைக்குள் வரும் அமைச்சர்களிடம் பேச ஆரம்பிக்கிறார் விஜய்.
சில நேரங்களில் நன்கு நெருக்கமான அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமே, ‘உங்களுக்கு என்ன துறை?’ என்று கேட்டு கொள்கிறாராம் முதலமைச்சர் விஜய். அமைச்சர்களே இவ்வளவுதான் அறிமுகம் என்றால்… ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் எந்த அளவுக்கு என்ற கேள்வியும் எழுகிறது.
முதலமைச்சர் விஜய் மிக நேர்மையான ஆட்சி நடக்க வேண்டும் என உறுதியாக விரும்புகிறார். அதில் ஒரு துளி சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார். அதனால்தான் கட்சி நிதி, அமைச்சர் நிதி எல்லாம் எந்த நிதியும் வாங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
இருந்தாலும் நிர்வாக ரீதியாக சில தடுமாற்றங்கள் முதலமைச்சர் விஜயிடம் தென்படுகின்றன. முதலமைச்சரே இவ்வாறு இருப்பதால் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள புதிய அமைச்சர்கள் என்ன முடிவு எடுப்பது என்பதில் தடுமாற்றத்தோடு தான் இருக்கிறார்கள். இன்னும் பலருக்கு தங்களுடைய துறை ரீதியான முழுமையான புரிதலே இல்லை.
சாதாரணமாக அமைச்சர்கள் இட வேண்டிய உத்தரவை கூட, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வரட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர்கள் தட்டிக்க கழிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தவறை அமைச்சர்கள் விரைவில் போக்கிக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் முதலமைச்சர் விஜயின், அமைச்சர்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி சில மலை முழுங்கி அதிகாரிகள் தங்களுடைய எல்லைக்குள் முதலமைச்சரை இழுத்து சென்றுவிடும் அபாயம் இருக்கிறது என்று அக்கறையோடும் ஆதங்கத்தோடும் சொல்கிறார்கள் நேர்மையான சில சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள்.
எனவே, முதல்வரும் அமைச்சர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.



