
தவெக இன்ஸ்டா மூலம்தான் வெற்றிபெற்றது என திமுக இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், திமுக தோற்றதற்கு அதன் மீது சாமானியர்களுக்கு இருந்த வெறுப்புதான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். வெற்று விளம்பரங்களால் மட்டுமே ஓர் பிம்பத்தை உருவாக்கி அது உண்மை என மக்களை நம்பவைக்க திமுக முயற்சி செய்தது. விடியல் வந்துவிட்டது என விளம்பரம் செய்தால் விடியல் வந்துவிடுமா? இந்த விளம்பரங்கள் உண்மை என மக்கள் நம்பினார்களோ இல்லையோ ஸ்டாலின் மற்றும் உதயநிதியும் நம்பிவிட்டார்கள். இந்த அலட்சியம்தான் திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் தோற்கடிக்கச் செய்து விட்டது.
தோல்வியில் துவண்டு விடாத திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் கர்நாடக மாநிலம் கூர்க் மலைப்பகுதிக்கு ஓய்வுக்காக சென்றுள்ளார். ஆனால், கொளத்தூர் தொகுதியில் தான் தோல்வி அடைந்ததை திமுக தலைவர் ஸ்டாலினால் சற்று கூட ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் என கட்சிக் கூட்டங்களில் கட்சி நிர்வாகிகளுக்கு தைரியம் சொல்லும் விதமாக ஊக்கம் தரும் விதமாக ஸ்டாலின் பேசினாலும்… வீட்டுக்குள் கொளத்தூர் மக்கள் என்னை ஏன் தோற்கடித்தார்கள் என்ற கேள்வியை அடிக்கடி எழுப்பியப்படியே இருந்துள்ளார்.
ஸ்டாலினுடைய மருத்துவர், தினமும் அறிவாலயம் சென்று கட்சியினரை சந்தித்து வாருங்கள்… என்று ஆலோசனை கொடுத்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சிகள் கட்சி வேலைகள் தோல்விக்காக காரணம் குறித்த விசாரணை குழுவின் பணிகள் பற்றிய விசாரிப்புகள் என்பதில் ஸ்டாலின் பிஸியாக இருந்தாலும் வீட்டில் இருக்கும்போது கொளத்தூர் தோல்வி குறித்து தன்னுடைய வேதனையை அடிக்கடி வெளிப்படுத்தியபடி இருந்துள்ளார்.
அதனால்தான் அவருடைய மகன் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் இருவரும் ஸ்டாலினை சற்று ரிலாக்ஸ் ஆக வைத்திருப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்து கர்நாடக மாநிலம் கூர்க் மலைவாச ஸ்தலத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.
ஜூன் மாதம் தொடங்கியபின் சென்னை வந்து, கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் உற்சாகமாக கலந்து கொள்வார் என திமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
அதேவேளையில், கோட்டையில் அமைச்சர்கள் தங்களது பணிகளை ஜரூராக ஆரம்பித்துவிட்டனர். அதில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி இருக்கும் நடவடிக்கைகள் திமுகவினருக்கும் குறிப்பாக முன்னாள் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவுக்கும், அதிகாரிகளுக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
அதாவது நெடுஞ்சாலை த்துறையில் கடந்த 10 வருடங்களாக ஒப்பந்தங்களை எடுத்து செய்த ஒப்பந்தக்காரர்கள் யார் யார், அவர்களது அரசியல் பின்னணி என்ன என்பது குறித்த விவரங்களை சேகரித்து தனக்கு வழங்குமாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உத்தரவிட்டுள்ளார்.
ஏனென்றால் கடந்த திமுக ஆட்சியிலும் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை ஒரு சில ஒப்பந்ததாரர்கள் மட்டுமே எடுத்து செய்திருக்கிறார்கள்.
இதனால் பல நூறு கோடி ரூபாய் ஆட்சியாளர்களுக்கு கமிஷனாக வழங்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் எடுத்து செய்யும் அளவுக்கு தகுதி பற்ற பல ஒப்பந்தக்காரர்கள் நிராகரிக்கப்பட்டு சிலருக்கு மட்டுமே பெருமளவிலான ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் கமிஷன் தொகை அதிகரித்ததோடு, குறித்த நேரத்துக்குள் ஒப்பந்த பணிகளை முடிக்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் அதிக அவகாசம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இதனால் ஒரு பக்கம் கமிஷன் என ஆட்சியாளர்களுக்கு ஆதாயம், இன்னொரு பக்கம் வேலை முடிவதற்கு தாமதமாவதால் மக்களுக்கு சங்கடம் என இரண்டு பாதகங்கள் ஏற்பட்டிருக்கின்றன.இந்நிலையில் இவற்றைக் களைவதற்காக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சில புதிய வழிகாட்டுதல்களை செய்திருக்கிறார்.
அதாவது நெடுஞ்சாலைத்துறை பணிகளை இதுவரை நிராகரிக்கப்பட்ட அதே நேரம் தகுதி பெற்ற மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணிதான் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களால் முழுமையான கவனம் செலுத்தி குறித்த கால கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியும்.
ஒரு சிலரை திருப்தி படுத்துவதற்காக பல்வேறு ஒப்பந்த பணிகளை ஒருவருக்கே வழங்கக்கூடாது என்றெல்லாம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியுள்ளார். இதன்படியே நெடுஞ்சாலைத்துறை பணிகள் வழங்கப்பட இருக்கின்றன.அதே நேரம் ஏற்கனவே கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் பற்றிய ஆய்வுகள் முடிந்து அதில் நடந்திருக்கிற முறைகேடுகள் பற்றியும் விசாரணை நடத்தப்படும் என்பதுதான் திமுக வட்டாரங்களுக்கு திகிலை ஏற்படுத்தியிருக்கிறது”
தற்போது, அதிமுகவில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் சற்று அதிர்ச்சி ரகம்தான். “விராலிமலை கோவில் தேரோட்டத்தில் மாவட்ட அமைச்சர் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பர்வேசும், அதிமுக எம்.எல்.ஏ விஜயபாஸ்கரும் சேர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.
விஜயபாஸ்கர் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு கிரீன் சிக்னல் கிடைத்தால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறார். ஆனால் அங்கிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை.
விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அந்தத் துறையின் செயலாளராக இருந்த செந்தில்குமார் ஐஏஎஸ் தான் இப்போது முதலமைச்சர் விஜயின் செயலாளராக இருக்கிறார்.இந்த வகையில் அரசியல் ரீதியான முயற்சிகளைத் தாண்டி அதிகாரிகள் மூலமும் விஜயை சம்மதிக்க வைக்க சில முயற்சிகளை விஜயபாஸ்கர் மேற்கொண்டு வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுப்பதோடு, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போல இல்லாமல் தற்போது அதிமுகவில் குடும்ப ஆதிக்கத்தை அனுமதித்து வருவதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் என்பவரே தற்போது அதிமுகவின் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
தனது மகனைத் துணை முதலமைச்சர் ஆக்குவதற்காக திமுகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலினை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததாகவும் தெரிகிறது. இந்தச் சந்திப்பு மகன் மிதுன் கொடுத்த அழுத்தத்தால் தான் நடந்ததாக கூறப்படுகிறது. அதிமுகவின் உள்கட்சி பிரச்னைக்கு எடப்பாடியின் மகனின் தலையீடுதான் காரணமென்று அதிமுகவின் முக்கியத் தலைகள் புலம்பி வருகின்றனர்.


