
ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் காக்கும் தொழில்நுட்பத்துக்காக 30 ஜிகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைவரிசையை அரசு ஒதுக்கியுள்ளதாக மத்தியச் சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துரையாடினார். அப்போது இன்டர்நெட் அல்லது மொபைல் வலையமைப்பு இல்லாமலேயே வாகனங்கள் ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் மோதாமல் இருப்பதற்காகப் பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் பரிமாறிக்கொள்ளும் திட்டம் உள்ளதாகக் கூறினார்.
இதற்காகத் தொலைத்தொடர்புத்துறை 30 ஜிகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைவரிசையை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ரேடியோ அலைவரிசை பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை வாகனங்களிடையே பரிமாறுவதால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒரு வாகனத்தின் இரு பக்கவாட்டுகளிலும், முன்புறமும் பின்புறமும் உள்ள மற்ற வாகனங்களுடன் இந்த ரேடியோ அலைத் தொடர்பின் மூலம் அவற்றுடன் மோதாமல் முட்டாமல் வாகனங்களை இயக்க முடியும். இந்தப் பாதுகாப்பு அமைப்பை வாகனங்களில் பொருத்துவதற்கு ஐயாயிரம் ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிலேயே வாகனங்கள் மோதாமல் இருப்பதற்கான இந்தப் பாதுகாப்பு அமைப்பைப் பொருத்தும் வகையில் 2 கோடி வாகனங்கள் தயாராகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


